அவன்

ரஜினியின் பின்னும்
கமலின் பின்னும் ஓடியவனுக்கு
ஜெயகாந்தனையும் பாலகுமாரனையும்
வைரமுத்துவையும் அறிமுகம்
செய்து வைத்தவன் அவன்

நோட்டு புத்தகங்கள்
பாடத்திற்கு மட்டுமே எனும்
மரபை உடைத்து
கவிதை மழையையும்
பொழியலாம் எனும் வித்தையை
காட்டியவன் அவன்

பல வருடங்களுக்குப் பிறகான
சந்திப்பில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய் என்றதற்கு
தன் இரண்டு வயது மகனின் தலையைத் தடவிக் கொண்டே
வேலைக்கான விண்ணப்பம் என்று சொல்லி சிரித்தான் - நிச்சயம் அந்த சிரிப்பில்
ஜெயகாந்தனோ வைரமுத்துவோ இல்லாமல்
வாழ்க்கை ஒளிந்திருந்தது

Comments

Popular Posts